சென்னை: தமிழகத்தின் நீண்டகால மின் தேவையைக் கருத்தில்கொண்டு இன்னும் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
.jpg)
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் '2023ல் தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை' என்ற அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு பேசியது:
"இந்த நிகழ்ச்சி, தமிழக பொருளாதார வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த நாள். 2011-ம் ஆண்டு நான் பதவியேற்றபோது தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக்குவேன் என்று உறுதி அளித்தேன்.
அமெரிக்கா குறித்து மார்ட்டின் லூதர் கிங்குக்கு பெரும் கனவு உண்டு. அதைப் போல சிறந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கு உண்டு. வேலையில்லாத இளைஞர்கள் இல்லை, முற்றிலுமாக வறுமை ஒழிப்பு, கல்வி, குடிநீர், துப்புரவு ஆகியவற்றுடன் பாதுகாப்பு, வளம், அமைதி ஆகியவற்றை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது எனது லட்சியமாகும்.
தொலைநோக்கு பார்வை திட்டம் ஏன்?
வரும் நூற்றாண்டில் தமிழகத்தை பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். இந்த கனவை நினைவுப்படுத்தும் வகையில் 2023 தொலைநோக்கு பார்வை திட்டம் அமைந்துள்ளது. தலைவர்கள் தாங்கள் காணும் கனவுகளை நனவாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். எங்கு தொலைநோக்கு பார்வை இல்லையோ அங்கு நம்பிக்கைக்கு இடமில்லை.
இப்போது அளிக்கப்படும் தொலை நோக்கு பார்வை திட்டம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் கிடைக்கும். அனைத்து வகையிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக இத்தகைய தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இதனை செயல்படுத்த இருக்கிறோம். இன்னும் 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட இது 20 சதவீதம் கூடுதலாக இருக்கும்.
தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்...
இன்னும் 11 ஆண்டுகளில் மக்கள் தொகை 15 சதவீதம் அளவுக்கு உயரும் என்பதை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி தனி நபர் வருமானம் 6 மடங்கு உயரும். தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா ஆகிய ஆசிய நாடுகளில் 1989ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் 7 முதல் 10 சதவீத வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது.
ஆசியாவில் சில நாடுகளும், இந்தியாவில் சில மாநிலங்களும் அதிகளவில் வளர்ச்சி விகிதத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் 11 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 11 ஆண்டுகளில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு, அதாவது 4 லட்சத்து 50 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும். இது உலக நாடுகளில் உயர், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சமமாக இருக்கும்.
வறுமையற்ற மாநிலமாகும்...
இந்த தொலைநோக்கு பார்வையின் மூலம் மாநிலம் முழுவதும் ஏற்றத் தாழ்வுகள் குறையும் அளவுக்கு நடவடிக்கைகள் அமையும். குறைந்த வருவாய் பிரிவினருக்கு கணிசமான ஆதாரங்களை அளிப்பதின் மூலம் வறுமையற்ற மாநிலமாக தமிழகம் மாறும். 2023ம் ஆண்டில் தமிழகத்தில் யாரும் பின்தங்கி இருக்கக்கூடிய நிலைமை இருக்காது.
அனைவருக்கும் குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். திறந்த சாக்கடை திட்டம் முற்றிலுமாக நீக்கப்படும். குடிசைகளற்ற, குடிசைப் பகுதிகளற்ற நிலைமையை உருவாக்க ஏழை மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப 25 லட்சம் வீடுகள் கட்டப்படும். உலகத்தரத்துக்கு ஈடாக உயர்நிலைக் கல்வியை கிடைக்கச் செய்வதுடன் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்படும்.
ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு தொழில், வர்த்தக நிறுவனமும் தங்கு தடையற்ற நிலையான மின்சாரத்தை பெறச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும்.
மாநிலத்தின் நீண்டகால மின் தேவை கருத்தில் கொண்டு இன்னும் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரங்கள் 10...
தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவையை கருத்தில் கொண்டு இன்னும் 11 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த 10 மையங்களை அமைக்க வேண்டும். அறிவியல் விவசாய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தி விவசாய உற்பத்தியை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த 10 நகரங்கள் தமிழகத்தில் உருவாக்கப்படும். தற்போதுள்ள நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இந்த நகரங்கள் விளங்கும்.
தேவை ரூ.15 லட்சம் கோடி...
இந்த திட்டங்களை நிறைவேற்ற கணிசமான நிதி தேவை. இவற்றை நிறைவேற்ற 15 லட்சம் கோடி ரூபாய் தேவை என்று மதிப்பிடப்படுகிறது. மாநில அரசு மட்டுமே இதற்கான ஆதாரத்தை திரட்ட முடியாது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். தனியார் துறை அமைப்புகள், வங்கிகள், நேரிடை வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகள் மூலம் கணிசமான நிதியை திரட்ட முடியும்.
தமிழக மக்கள் சார்பில் அடிப்படை வசதி சேவைகளை பெறுவதற்கு மாநில அரசு முக்கிய பங்காற்றும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் துறை பங்களிப்பை ஈர்ப்பதற்கு தமிழகம் முதலீடு செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.
No comments:
Post a Comment