நம் பீரங்கிகளுக்கு வெடிகுண்டு இல்லை, ஆயுதங்கள் பழையவை, ராணுவம் போர் செய்யும் தயார் நிலையில் இல்லை என்கிறார் தலைமைத் தளபதி. உண்மை என்ன? நமது ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங், அதிரடித் தாக்குதல் நடத்தும் கமோண்டோ பயிற்சி பெற்ற முதல் இந்தியப் படைத்தலைவர். எதிர்பாராத நேரத்தில் குண்டு வீசி எதிரியை அழிக்கும் முறைகளுக்கான பயிற்சியில் சிறந்து விளங்கியதற்காகப் பதக்கம் பெற்றவர். சென்ற வாரம் அவர் வீசிய குண்டுகளினால் தேசமே அதிர்ந்து போயிற்று. முதலில் அவர் வீசிய குண்டு: "எனக்கு 14 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டது. அதைக் குறித்து ராணுவ அமைச்சரிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்ற புகார். இந்தக் குண்டின் தீ மீடியாவில் பற்றி எரிந்தாலும் விவரம் தெரிந்தவர்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் என்பது புதிதா என்ன என்ற நினைப்பும், ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூடும்போதும், ஏதாவது சர்ச்சையைக் கிளப்பி அதை முடக்குவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, மீடியாக்களுக்கும் வாடிக்கை என்ற சலிப்பும் அதற்குக் காரணம், ஆனால் அந்தத் தீ அடங்குவதற்குள் அடுத்த குண்டு வந்து விழுந்தது. "நமது ராணுவம் மிக மோசமான நிலையிலிருக்கிறது. நமக்குத் தேவையான ஆயுதங்களும் இருக்கும் பீரங்கிகளுக்கு போதுமான வெடிமருந்துப் பொருட்களும் இல்லை. ராணுவம் ஒரு போரை சந்திக்கும் தயார் நிலையில் இல்லை" என்ற அந்தக் குண்டுதான் திடுக்கிட வைக்கிறது, தலைமைத் தளபதியின் இந்தக் கூற்றை அலட்சியப்படுத்த இயலாததற்கு அவரின் பின்னணியும் ஒரு காரணம். வி.கே. சிங்கின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அவரது தாத்தா, அப்பா ஆகியோர் இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்கள். அவர் ராணுவப் பள்ளியில் படித்தபோதும், பின் பணியாற்றிய இடங்களிலும் தன் திறமையால் தனி இடம் பெற்றவர். முதலில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்த ரஜபுத்திர ரெஜிமெண்ட்டுக்கே பின்னாளில் கமாண்டரான பெருமை பெற்றவர். அமெரிக்காவின் மிகச் சிறந்த போர்ப்பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டபோது அதில் முதல் மாணவராக தேர்வு பெற்று கல்லூரியில் நிரந்தரமாக நிறுவப்படும் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றவர். இத்தகைய கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியரும் இவரே. இத்தனை சிறப்பு வாய்ந்த ஓர் உயர் அதிகாரி ராணுவத்தை குறைத்துப் பேச நியாயமில்லை. ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார் என்றால் என்ன காரணம்? தவறாகப் பதிவு செய்யப்பட்ட தன் பிறந்த தேதியை மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சிகளில் தோல்வியடைந்து ஓராண்டு பதவி நீட்டிப்பை இழந்ததனால் (பார்க்க: பெட்டிச் செய்தி) வெறுப்புற்ற சிங், இப்படி ஒரு கடிதத்தை எழுதி அரசை தர்மசங்கடத்திற்குள்ளாக்குகிறாரா? அப்படிச் சொல்லிவிடுவதற்கில்லை. ஏனெனில் கடிதம் எழுதப்பட்டது மார்ச் 12ம் தேதி. பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்கு ஒரு மாதம் முன்னரே, பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த நிலைமையைப் பற்றி ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார் ஜெனரல் வி.கே.சிங். பின் தனது உதவியாளர்களுடன் சென்று ஒரு பிரசன்டேஷனும் செய்திருக்கிறார். அதற்குப் பதிலோ, நடவடிக்கைகளோ இல்லாததால் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். "இது ராணுவ நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம். தான். இதற்கு முன்பும் ராணுவத் தளபதிகள், பிரதமருக்கு கடிதங்கள் எழுதியிருப்பதை நான் அறிவேன். இப்படி பிரதமருக்கு தெரிவிக்க வேண்டியது அவரது கடமைகளில் ஒன்று. எனக்கு முன்பிருந்த தலைமை அதிகாரிதான் பதவியிலிருந்து ஓய்வு பெறும் முதல் நாள் இப்படி ஒரு கடிதத்தை அன்றைய பிரதமருக்கு எழுதியிருக்கிறார்" என்கிறார் முன்னாள் கடற்படைத்தலைவர் விஷ்ணு பாகவத். மே மாதம் ஓய்வு பெறவிருக்கும் சிங், இத்தனை நாள் இல்லாமல் மார்ச் மாதம் ஏன் இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார்? மார்ச் முதல் வாரத்தில் மிக ரகசியமாக திட்டமிடப்பட்டு இந்திய-சீன எல்லைப் பகுதியில் சீனா ஒரு போர் ஒத்திகை நிகழ்த்தியது. இத்தகைய ஒத்திகைகள் ராணுவத்தில் வழக்கமான விஷயம்தான் என்றாலும், அதைக் கூர்ந்து கவனித்த நமது ராணுவம் நம் தேவைகளை உணர்ந்து உடனடியாகச் செயலில் இறங்கியது. அதன் தொடர்பாக எழுதப்பட்டதுதான் இந்தக் கடிதமும். இந்த ரகசியக் கடிதம் எப்படி வெளியானது என்பதை அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஒரு குடிமகனாக நம்முடைய கவலை எல்லாம் அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் உண்மையா என்பதுதான். என்ன சொல்கிறது அந்தக் கடிதம்? அந்தக் கடிதத்தில் சொல்லப் பட்டிருக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள்... 1. நமது முக்கியப் படைப் பிரிவுகளான இயந்திர மயமாக்கப்பட்ட தரைப்படை, விமானத் தாக்குதலை சமாளிக்கும் படை, சிறப்புப் படை மற்றும் சிக்னல் பிரிவு போன்றவற்றின் நிலைமை மிக அபாயகரமாகயிருக்கிறது. 2. நமது பீரங்கிப்படை முழுவதற்கும் எதிரிகளின் பீரங்கிகளை அழிக்கத் தேவையான வெடிகுண்டுகள் இல்லை. விமானத் தாக்குதலை சமாளிக்கும் ஆயுதங்களில் 97 சதவிகிதம் பழசாகி விட்டன. அவை தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை வீரர்களுக்குத் தரவில்லை. 3. நமது தரைப் படையில் நிறைய குறைபாடுகளும், இரவு நேரத்தில் போரிடப் போதுமான ஆயுதங்களும் இல்லாத நிலை நீடிக்கிறது. சிறப்புப் படையினருக்கு அத்தியவாசியத் தேவையான ஆயுதங்கள் மிக மிகக் குறைந்த அளவிலேயிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நமது ராணுவம் தயார் நிலையில் இல்லை. இது உண்மைதானா? இதற்கு அமைச்சர் நேரடியாகப் பதில் தர மறுக்கிறார். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களின் தன்மையே அது பற்றிய பொது விவாதம் தேச நலனுக்கு உகந்ததல்ல என்பதை உணர்த்தும் என்று நாடாளுமன்றத்தில் சொல்லிவிட்டார் அமைச்சர். அமைச்சர் விவரமாகப் பாராளுமன்றத்தில் பதிலளிக்காத முடியாத இந்தப் பிரச்சினையின் உண்மை நிலை என்ன? நமது ராணுவம் தயார் நிலையில் இல்லையா? படை வீரர்களிடம் உண்மையிலேயே நல்ல ஆயுதங்கள் இல்லையா? இந்த அரசு தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டிருக்கிறதா என்று ஒரு குடிமகனுக்கு எழும் சந்தேகங்களை ‘புதிய தலைமுறை’ ஆராய்ந்தது. எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் இவை: சீனாவிற்கு அடுத்த நிலையில் உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவம் இந்தியாவுடையது. 3 கோடி பேர்களுக்கு மேல் பணியாற்றும் இந்த ராணுவத்தை நிர்வகிப்பது எளிதான விஷயமல்ல. ஆனால் பாகிஸ்தான், சீன அரசுகளைவிட திறம்பட ராணுவத்தை நிர்வகிக்கிறது என்கிறது உலகின் பல நாட்டு ராணுவங்களைப் பற்றி ஆராயும் ஒரு பிரான்ஸ் ஆராய்ச்சி நிறுவனம். ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம்மில் சர்வதேச அமைதிப் பணிகளின் ஆராய்ச்சி மையம் (Stockholm International Peace Research Institute) சுருக்கமாக SIPRI ஒன்று உள்ளது. ஏன் உலகின் பல நாடுகள் ஆயுதங்களை வாங்கிக் குவித்து உலக அமைதியை கேள்விக்குறியாகவே வைத்திருக்கிறது என்பதை ஆராயும் அமைப்பு இது. இதன் 2010ம் ஆண்டறிக்கை உலகிலேயே ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிப்பது இந்தியா, அடுத்த இடம் சீனாவிற்கு என்கிறது. உலக ஆயுத உற்பத்தியில் பத்து சதவிகிதத்தை இந்தியா வாங்குகிறது. 2010ம் ஆண்டு மட்டும் அதற்கு முந்தைய ஆண்டை விட 28 சதவிகித பட்ஜெட்டில் ஒதுக்கி, 139 லட்சம் கோடிகள் ராணுவத்திற்காகச் செலவிடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. இந்தியா வாங்கியிருக்கும் நவீன ஆயுதங்களைப் பட்டியலிடும் இந்த அறிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய ராணுவம் 200 மில்லியன் டாலர் செலவிட்டு அதிவேகப் போர் விமானங்கள், கடற்படை ரேடார்கள் போன்றவைகளை வாங்கி மிகவும் நவீனமடைந்து ஆசியாவிலேயே வலிமை மிகுந்த, அண்டை நாடான சீனாவிற்குச் சவால் விடும் அளவிற்கு வளர்ந்துவிடும் எனக் கணித்திருக்கிறது. ஆண்டுதோறும் ராணுவத்திற்குப் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி, பெருமளவில் ஆயுதங்கள் வாங்கப்பட்டிருப்பது உண்மையானால் ராணுவத்தின் தலைமை அதிகாரி ஏன் ஒரு கருத்தைச் சொல்கிறார்? எங்கே போயிற்று பணம் அல்லது வாங்கிய ஆயுதங்கள்? நமது ராணுவத்தின் மிகப் பெரிய பிரச்சினை ஆயுதங்கள் மட்டுமல்ல, ராணுவ அமைச்சகத்தின் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தும் நடைமுறைச் சிக்கல்களும்தான். தேவையானது எனத் தெரிந்தும் முடிவெடுப்பதில் தாமதம், முடிவெடுத்தபின் ஆர்டர் கொடுக்க நிறுவனங்களை பட்டியலிடுவதில் தாமதம், கொள்முதல் செய்வதற்குள் கிளம்பும் சட்ட சிக்கல் இப்படி பல மட்டங்களில் பிரச்சினை. பொதுவாக அயல் நாட்டு நிறுவனங்களிடம் கொடுத்த ஆர்டர், ஆயுதமாக டெலிவரியாக 6 மாத காலமாகும். போபர்ஸ் பிரச்சினைக்குப் பின் நம் நாட்டில் மூன்று வருடங்களுக்கு நாம் பீரங்கிகள் வாங்கவில்லை. அதில் 400 மட்டுமே இப்போது செயல்பாட்டில் இருக்கின்றன. தேவையான ஹூவிட்டிஸர் (HOWITZER) ரக பீரங்கிகள் வாங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு சிங்கப்பூர் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட ஆர்டர், நீதிமன்ற ஆணையால் நிறுத்தப்பட்டு அந்த நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டது. காரணம், 2009ல் இந்தியப் படைக்கு ஆயுதங்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் நிகழ்ந்த ஓர் ஊழலில் அந்த சிங்கப்பூர் நிறுவனம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுதான். இன்று நமது ராணுவம் போராட வேண்டிய முதல் எதிரி, பாதுகாப்புத் துறையில் ஊடுருவியிருக்கும் ஊழல்தான். போபர்ஸ் பிரச்சினைக்குப் பின் இடைத்தரகர்களுக்கு ராணுவக் கொள்முதலில் இடமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. அதனால் ஆயுத சப்ளை செய்யும் உலகின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு, பொதுத்துறையின் மூலமாக வாங்கப்பட்டது. இது தரகர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இந்திய ராணுவத்தின் பட்ஜெட் மிகப் பெரியது. மொத்தத் தேவையில் 70 சதவிகிதம் ஆயுதங்களும் தளவாடங்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால் ஒவ்வொரு ஆர்டரும் பெரிய அளவில் கொடுக்கப்படுவதால் ஆண்டுதோறும் மிகப் பெரிய அளவில் சர்வதேச நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை வியாபாரம் செய்கிறது. இதனைப் பெற பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகளை ‘லாபியிஸ்ட்கள்’ என்ற பெயரில் அமர்த்தியிருக்கிறது. அவர்கள் அரசியல்வாதிகளுடனும் பாதுகாப்புத்துறையுடனும் தொடர்பிலிருப்பது நாடு அறிந்த சிதம்பர ரகசியம். சர்வ வல்லமை கொண்ட அவர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதிகாரபூர்வமாக 4 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரை ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களிடம் கமிஷன் பெறும் இவர்கள், தங்கள் வருமானத்தினால் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பலமிக்க பணநாயக சக்தியாக வளர்ந்திருக்கிறார்கள். ஜெனரல் வி.கே.சிங் விஷயத்தில் அவர்களின் பங்கு குறித்து அதிகம் பேசப்படுகிறது. ராணுவத்தின் உள்துறை நிர்வாக மற்றும் பணியாளர்கள் கட்டமைப்பை சீராக்கத் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் மிகக் கண்டிப்பான அதிகாரியான சிங்கின் பணிக்காலம் நீடித்தால் தங்கள் வியாபாரத்திற்கு இடையூறு என்று சில நிறுவனங்கள் அவர் வயது விஷயத்தை தகவல் உரிமைப் பிரச்சினையாக்கி மீடியாவினால் அதைப் பெரிதாக்கி அவரை இந்த ஆண்டே ஓய்வு பெறச் செய்ய அல்லது ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளிவிட்டார்கள். அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் ஒன்றுதான் அவரது ரகசியக் கடிதத்தை கசியச் செய்தது என்கிறார்கள் சில மூத்த ராணுவ அதிகாரிகள். இந்திய ராணுவத்துறையின் பாரம்பரியங்களில் ஒன்று ஊழல். நாட்டின் முதல் ராணுவ அமைச்சர் வி.கே.கே. மேனன் காலத்தில் ஜீப் வாங்குவதில் துவங்கிய ஊழல், கட்சி பேதமில்லாமல் எல்லா ஆட்சிகளிலும் இன்று வரை தொடர்கிறது. இந்திரா காந்தி காலத்தில் சப்மெரீன், ராஜீவ் காலத்தில் போபர்ஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலத்தில் கார்கில் சவப்பெட்டி, இன்றைய அரசில் ஆதர்ஷ் எனத் தொடர்கதையாக அது நீண்டுகொண்டே போகிறது. அரசியல்வாதிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக ராணுவத்துறை இருப்பது ஒன்றும் ரகசியமான விஷயம் அல்ல."எனக்கு 14 கோடி ருபாய் லஞ்சம் தர முயற்சிக்கப்பட்டது" என்று ஜெனரல் வி.கே. சிங் சொல்லியிருப்பது அதற்கான பகிரங்க சாட்சியம், அவலத்தின் உச்சகட்டம். "ராணுவப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகை லாரி வாகனங்கள் 600 எண்ணிக்கையில் வாங்க ராணுவக்கொள்முதல் துறை பரிந்துரை செய்துள்ள பைலுக்கு நான் ஒப்புதல் அளித்தால் எனக்கு 14 கோடி தரப்படும் எனவும், எனக்கு முன்பிருந்தவர்கள் இதுபோல் வாங்கியிருக்கிறார்கள், இனி வருபவர்களும் வாங்கத்தான் போகிறார்கள், எனவே உங்களுக்கு ஒன்றும் பிரச்சினைவரப்போவதில்லை’ என்று சமீபத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், தேசத்தின் தலைமை ராணுவ அதிகாரியான என்னிடமே நேரிடையாக வந்து லஞ்சம் வாங்கிக்கொள் எனச் சொன்னபோது திகைத்துப் போய்விட்டேன். உடனடியாக அவரை அறையைவிட்டு வெளியேறச் சொல்லிக் கண்டித்தேன்" என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கும் ஜெனரல் வி.கே.சிங் தொடர்ந்து சொல்லியிருக்கும் மிக அதிர்ச்சியான விஷயம், "இந்த விஷயத்தை உடனே ராணுவ அமைச்சர் அந்தோனியிடம் நேரடியாக போய்த் தெரிவித்தேன். இரண்டாண்டுகளாகியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்கிறார் ராணுவத்தின் மீது பரம்பரையாகக் காதல் கொண்ட திறமையான தலைமைத் தளபதி. அமைச்சரோ பொதுவாழ்வில் நேர்மைக்கும் எளிய வாழ்க்கைக்கும் பெயர் பெற்றவர். அப்படியும் நிலைமை இப்படி! இந்த விஷயத்தில் பல கேள்விகள் எழுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயத்தை இப்போது ஏன், அதுவும் சரியாக பாராளுமன்றம் அமர்விலிருக்கும்போது மீடியாவில் சொல்கிறார்? பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனைப்படி ஏன் அந்த முன்னாள் அதிகாரியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவோ அல்லது ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளிடமோ புகார் தரப்படவில்லை? அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்ட, ராணுவத்தின் கௌரவத்தையே விலை பேசிய விஷயத்தில் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அவரிடம் தொடர்ந்து அது பற்றிப் பேசவோ அல்லது ஒரு கடிதம் கூட அனுப்பாததன் காரணம் என்ன? நாட்டின் தலைமை ராணுவத் தளபதி என்ற முறையில் வி.கே.சிங்கே துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது, அவர்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகளாகயிருந்தால் கூட, நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஏன் அதைச் செய்யவில்லை? ஏன் குறைந்தபட்ச நடவடிக்கையான போலீஸ் புகார் கூட கொடுக்கப்படவில்லை? கடந்த 25 ஆண்டுகளில் ஒரு நிறுவனத்திலிருந்து இதுவரை தரமற்ற 7,000 லாரிகள் வாங்கப்பட்டிருப்பதாகச் சொல்லும் ஜெனரல், உடனடியாக அந்த நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்து கொள்முதலை நிறுத்தக் கட்டளையிட்டிருக்கலாமே? அமைச்சருக்கு எழுத்துமூலம் புகார் அனுப்புவதைத் தவிர்த்து தனக்கு லஞ்சம் தர முயன்றவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் எனச் சொல்வதின் மூலம் இவரும் ஓர் அரசியல்வாதி ஆகிக் கொண்டிருக்கிறாரா? 14 கோடி ரூபாய் லஞ்சப் பேரம் தன் துறையில் நடக்கிறது என்பது நாட்டின் ராணுவத் தளபதி மூலம் தெரிந்த பின்னரும் ராணுவ அமைச்சர் ஏன் அது எழுத்துமூலம் வரவேண்டும் என்று மெத்தனமாகக் காத்திருக்கவேண்டும்? ராணுவத் தலைமை அதிகாரி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராணுவ அமைச்சக அதிகாரிகளின் போன்களை ஒட்டுக்கேட்கிறார் என்று வந்த அனாமதேயக் கடிதத்தின்மேல் உடனே நடவடிக்கை எடுத்து விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர் இதில் ஏன் அமைதி காத்தார்? ஜெனரல் வி.கே.சிங் வயது குறித்த பிரச்சினையில் அவர் எழுத்துமூலமாக, பல ஆதாரங்களுடன் தந்திருந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்த அமைச்சகம், லஞ்சப் புகார் எழுத்துமூலமாக தெரிவிக்கப்படாததால் எதுவும் செய்யமுடியவில்லை என்று சொல்வதற்குப் பின் என்ன நடந்திருக்கிறது? அடிப்படைத் துறை ரீதியான விசாரணை கூட அவசியமில்லை என்று இரண்டு ஆண்டுகளுக்குக்கும் மேல் ஒதுக்கப்பட்டிருந்த விஷயம், ஊடகங்களில் வெளிவந்த உடனே சி.பி.ஐ.விசாரணைக்கு எவருடைய புகாருமில்லாமல் உத்தரவிடப்பட்டது ஏன்? விசாரணையைத் துவக்கிய முதல் நாளிலேயே சி.பி.ஐ. லஞ்சம் தரும் முயற்சி பற்றிய உரையாடல்கள் பதிவு செய்யப்பட்ட டேப்புகள் கிடைத்திருப்பதாகவும் அதன் நம்பகத்தன்மை சோதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த டேப் இப்போது எப்படி, எங்கிருந்து சி.பி.ஐ.க்கு கிடைத்தது? இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கேள்வி: இந்திய பாதுகாப்புத்துறையில் லஞ்சம் என்பது அழிக்கவே முடியாத விஷயமாக நிலை பெற்றுவிட்டதா? இந்தக் கேள்விகளுக்கான நேர்மையான விடையில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. ஆயுதங்களில் மட்டும் அல்ல. பெட்டி செய்தி: பிறந்த தேதி பிரச்சினை
வி.கே.சிங் பிறந்தது 1950ம் வருடமா அல்லது 51ம் வருடமா என்பதுதான் பிரச்சினை. அவர் தந்தை ராணுவ அதிகாரியானதால் சிங் பிறந்தது ராணுவ ஆஸ்பத்திரியில். ராணுவ விதிகளின்படி குழந்தைகளின் பிறந்தநாள் அதிகாரிகளின் சர்வீஸ் ரெக்கார்டுகளில் குறிக்கப்படும். அப்படி குறிக்கப்பட்டிருக்கும் வருடம் 1951. ஆனால் 14 வயதில் நேஷனல் டிபன்ஸ் அகாதெமியின் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் வி.கே.சிங்தனது பிறந்த வருடத்தை 1951 என எழுதிவிட்டார். அங்கு படிப்பு முடிந்து வெளிவரும் முன்னரே அவரது தந்தை தனது சர்வீஸ் ரெக்கார்டுகளுடன் மனு செய்து அந்தத் தவறைத் திருத்திவிட்டார். ஆனால் சிங் ராணுவத்தில் சேரும்போது முதலில் பதிவு செய்யப்பட்ட தேதியான 1951தான் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. பள்ளி இறுதியாண்டு சான்றிதழில் 1950. ஆனால் மற்றதில் 1951. ஜெனரலாக பதவி ஏற்றபோது தனது பதவிக்காலம் 2013 வரை என எண்ணியிருந்தவருக்கு 2012 வரைதான் எனச் சொல்லப்பட்டது. சரியான வயதைப் பதிவு செய்ய மனு செய்த வி.கே.சிங்கிற்கு ராணுவ ரெக்கார்டுகளில் பிறந்த தேதி மாற்றம் செய்யப்படுவதில்லை எனற விதி சுட்டிக் காட்டப்பட்டு நிராகரிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் இவரது மேல்முறையீட்டு மனுக்களை ஏற்கவும் இல்லாமல் நிராகரிக்கவும் இல்லாமல் காலம் கடத்தியது. அதனால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். முந்திய பதவி உயர்வுகளைப் பதிவு செய்யப்பட்ட பிறந்த ஆண்டின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு இப்போது பிரச்சினை எழுப்புவதால் உச்ச நீதிமன்றம் வழக்கை ஏற்க மறுத்து விட்டது. எனக்கு பதவி நீட்டிப்பு எதுவும் வேண்டாம். அரசு ஆணைப்படி நான் ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். ஆனால் இது என் நேர்மை சம்பந்தப்பட்ட விஷயம். என் வயது தவறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை ராணுவம் ஒப்புக்கொண்டால் மட்டும் போதும் என்று கேட்டபோது நீதிமன்றம் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டது.
ரமணன்( புதிய தலைமுறை ) |
Sunday, 15 April 2012
தேசம் பாதுகாப்பாக இருக்கிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment