Monday, 16 April 2012


இரு மொழி அறிவு உடம்புக்கு நல்லது






தற்காலம் விரைவான உலகமயமாக்கல் பரவிக் கொண்டிருக்கிற காலம். தாய்மொழியோடு கூடுதலாக ஓரிரு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால் பிற மாநில மற்றும் நாட்டு மக்களுடன் உறவாடவும், பணியாற்றவும், வர்த்தகத் தொடர்பு கொள்ளவும் உதவியாயிருக்கும்.
இதற்கும் மேலாகப் பன்மொழித் தேர்ச்சி உடலளவிலும் மனதளவிலும் அ0டிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் அறிவியலார் அறிவித்திருக்கிறார்கள். இரண்டே மொழிகளை அறிந்திருப்பது கூட மூளையின் அறிவு சார்ந்த ஆற்றலை அதிகரிக்கிறது. அதன் செயல்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பை உணர்ந்து இனம் காணும் திறன்களைக் கூர்மையாக்குகிறது.
கடந்த இருபதாம் நூற்றாண்டில் குழந்தைகளுக்குத் தாய்மொழியோடு கூடுதலாக மொழிகளைக் கற்பித்தல் அனுபவ அறிவுத்திறன் வளர்ச்சிக்கு இடையூறு செய்து கல்வி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் என உளவியலாளர்களும், கல்வியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கருதியிருந்தார்கள். ஆனால், அண்மை ஆய்வுகள் இருமொழித் திறன் அனுபவ அறிவு வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தையே ஏற்படுத்துவதாகக் காட்டுகின்றன.
மூளையில் வெவ்வேறு மொழித் திறன்கள் வெவ்வேறு நினைவுப் பகுதிகளில் பதிவாகின்றன. ஒருவர் தானறிந்த மொழிகளில் ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது மற்ற நினைவுப்பகுதிகள் இயங்குவது தணிக்கையாகிறது.
இது தனக்குள் நிகழும் குறுக்கீடுகளைச் சீர்செய்து தேர்வு செய்து தேவையான நினைவுப் பகுதியை மட்டும் ஓங்கிச் செயல்பட வைக்கும் பயிற்சியை மூளைக்கு அளிக்கிறது. அதன் காரணமாக அனுபவ அறிவுத்திறன்களுக்கு வலுவூட்டும் பயிற்சிகளை மனம் மேற்கொள்ளத் தூண்டப்படுகிறது.
எல்லன் பியாலிஸ்டாக், மைக்கேல் மார்ட்டின் ரீ என்ற இரண்டு உளவியல் ஆய்வர்கள் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் 2004-ம் ஆண்டில் செய்த ஆய்வுகள் சிலவகையான மனக்கணக்குகளுக்கும் புதிர்களுக்கும் விரைவாக விடை காண்பதில் இரு மொழியினர் ஒற்றை மொழியினரை விட அதிகத் திறமை பெற்றிருப்பதாகக் காட்டின.
ஆங்கிலம் மட்டுமே பேசப்படுகிற குடும்பங்களின் குழந்தைகள் ஒரு குழுவாகவும் ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் பேசப்படும் குடும்பங்களின் குழந்தைகள் ஒரு குழுவாகவும் சோதனை செய்யப்பட்டனர். ஒரு கணினித்திரையில் நீல நிறச் சதுரம் வரையப்பட்ட ஒரு குப்பைக்கூடையும் சிவப்பு நிறவட்டம் வரையப்பட்ட ஒரு குப்பைக்கூடையும் காட்டப்பட்டன. திரையில் நீல நிற வட்டங்களும் சிவப்பு நிறச் சதுரங்களும் ஒவ்வொன்றாகத் தோன்றும்.
முதல் சோதனையில் குழந்தைகள் விசையைப் பயன்படுத்தி நீல வட்டங்களை நீலச் சதுரக் கூடையிலும் சிவப்புச் சதுரங்களை சிவப்பு வட்டமுள்ள கூடையிலும் போய் விழுமாறு செய்ய வேண்டும். இரு குழுவினரும் நிறத்தின் அடிப்படையில் வட்டங்களையும் சதுரங்களையும் எளிதாகப் பிரித்தறிய முடிந்தது புலனாயிற்று.
அடுத்த கட்டச் சோதனையில் வடிவத்தின் அடிப்படையில் பிரித்து நீல வட்டங்களைச் சிவப்பு வட்டமுள்ள கூடையிலும் சிவப்புச் சதுரங்களை நீலச் சதுரமுள்ள கூடையிலும் விழச் செய்யுமாறு குழந்தைகள் பணிக்கப்பட்டன. இந்தச் சோதனையில் இரு மொழியினர் ஒற்றை மொழியினரை விட விரைவாகவும் திறமையுடனும் செயல்பட்டனர். நிற முரண்பாட்டினால் அவர்கள் குழம்பிவிடவில்லை.
இத்தகைய சோதனைகள் மூலம் கிடைத்த தரவுகள் இரு மொழித் திறன் மூளையின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதாகக் காட்டுகின்றன. மூளையின் நிர்வாகச் செயல் பகுதி திட்டமிடுதல், பிரச்னைக்குத் தீர்வு காணல், சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய பணிகள் போன்றவற்றை நிகழ்த்தத் தேவையான கவனக் குவிப்பு ஆணைகளை வெளியிடுகிறது. ஒரு பணியில் முனைந்திருக்கையில் கவனத்தைத் திசை திருப்பும் புறக்காரணிகளைப் புறந்தள்ளிச் செய்து கொண்டிருக்கும் பணியில் கவனத்தைக் குவிக்க வேண்டியிருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு பணிகளை மாற்றி மாற்றிச் செய்ய நேரிடும்போது, ஒரு பணிக்கான தரவுகளை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு மற்ற பணியைச் செய்ய வேண்டியிருக்கும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சாலையில் காரை ஓட்டிச் செல்பவர் கண்ணெதிரில் தெரியும் காட்சிகளைக் கண்காணித்தவாறே, எந்தச் சாலைச் சந்திப்பில், எந்தத் திசையில் திரும்ப வேண்டும் என்பன போன்ற தரவுகளையும் நினைவில்கொண்டு வந்து கொண்டேயிருக்க வேண்டும். இதற்கான செயல்முறைகளை மூளையின் நிர்வாக ஆணையம் வகுத்து வழிகாட்டுகிறது. இரு மொழித் திறன் அந்த ஆணையத்தை வலுவானதாக ஆக்குகிறது.
திசை திருப்பும் புறக்காரணிகள் தணிக்கப்பட வேண்டாத சூழ்நிலைகளில்கூட இரு மொழியர்கள் அதிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஒரு சோதனையில் ஒரு தாளில் எண்கள் அள்ளித் தெளித்தாற்போல எழுதப்பட்டிருந்தன. குழந்தைகள் ஒன்றிலிருந்து ஆரம்பித்து ஏறு வரிசையில் எண்களைக் கோடு போட்டு இணைக்கப் பணிக்கப்பட்டன. இதிலும் இரு மொழியர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
இரு மொழியர்கள் சுற்றுச்சூழலைத் தொடர்ந்து கணிக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாகப் பல மொழிகள் புழங்கும் ஹைதராபாத் போன்ற நகரில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தை தன் பெற்றோரிடம் தமிழிலும், ஆயாவுடன் தெலுங்கிலும் பேச வேண்டியிருக்கும்.
வெளியே சென்றால் சிலரிடம் ஆங்கிலத்திலும் வேறு சிலருடன் உருது மொழியிலும் உரையாட வேண்டியிருக்கும். காரோட்டி சாலையிலேற்படும் காட்சி மாற்றங்களைத் தொடர்ந்து கணிக்க வேண்டியிருப்பதைப்போலவே அக் குழந்தையும் சுற்றுவட்டாரத்தின் மாற்றங்களைத் தொடர்ந்து கணிக்க வேண்டியிருப்பதாக ஆல்பர்ட் கோஸ்டா என்ற ஆய்வர் கூறுகிறார். இப் பயிற்சி அக்குழந்தையின் மூளையிலுள்ள கண்காணிப்புப் பகுதி குறைந்த உழைப்பில் அதிகச் செயலுறு திறனுடன் இயங்கச் செய்வதாக அவர் விவரிக்கிறார்.
இரு மொழித் திறன் சிசுப் பருவம் முதல் முதுமை வரை மூளையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மொழிச் சூழலில் வளர்ந்து, பின்னர் ஒரு இரண்டாவது மொழியைக் கற்றுக் கொள்கிறவர்களிடமும் இவ்வாறான தாக்கத்தைக் காண முடிகிறது.
2009-ம் ஆண்டில் ஆக்னஸ் கோவாக்ஸ் என்ற இத்தாலிய ஆய்வர் இரு மொழி பேசும் குடும்பங்களிலிருந்தும் ஒற்றை மொழி பேசும் குடும்பங்களிலிருந்தும் ஏழு மாதக் குழந்தைகளைத் திரட்டி ஒரு சோதனை செய்தார். ஒரு பெரிய கணினித் திரையின் முன்னால் அவர்களை இருத்தினார். ஒரு மணியை ஒலித்ததும் திரையின் வலது மேல் கோடியில் ஒரு பொம்மை தோன்றும்படி செய்தார்.
சிலமுறை இவ்வாறு செய்தபின் எல்லாக் குழந்தைகளும் மணியடித்ததும் தலையைத் திருப்பித் திரையின் வலது கோடியைப் பார்த்துப் பொம்மை தோன்றுவதை ரசித்தன. அடுத்த கட்டத்தில் மணியடித்ததும் பொம்மை திரையின் இடது கீழ்க் கோடியில் மாறித் தோன்றியது. இரு மொழிக் குடும்பக் குழந்தைகள் உடனடியாகப் பார்வையைத் திசை மாற்றிச் செலுத்தப் பழகி விட்டன. ஒரு மொழிக் குடும்பக் குழந்தைகளுக்கு அது பிடிபடவேயில்லை.


இரு மொழித் திறனின் அனுகூலங்கள் முதுமையிலும் நீடிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. டாமர் கோலான் என்ற அமெரிக்க நரம்பு உளவியல் ஆய்வர் ஆங்கிலமும் ஸ்பானிஷ் மொழியும் அறிந்த முதியவர்களை ஆய்வு செய்து அவர்கள் ஒற்றை மொழியினரை விடத் தாமதமாகவே மறதி நோயினால் பீடிக்கப்படுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார். மொழித் தேர்ச்சி கூடக்கூட இந்த நற்பலன்கள் அதிகமாகின்றன.



First Published : 06 Apr 2012 01:01:02 AM IST

No comments:

Post a Comment