இரண்டாம் பசுமைப் புரட்சி
தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13 முதல் அனைத்து வருவாய் கிராமங்களிலும் உழவர் பெருவிழா நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பச் செய்திகள், திட்டப் பலன்கள் அவர்களின் சொந்த கிராமத்திலேயே கிடைக்கச் செய்யும் வகையில் நடத்தப்படும் இந்த விழாவில், அனைவருக்கும் அறுசுவை விருந்தும் அளிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தொழில் வளர்ச்சி பெரிய நகரங்களில் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்கள் வேறு வேலைத் தேடி நகரங்களுக்கு குடி பெயர்ந்து செல்கின்றனர்.
இதன் விளைவாக ஏற்படும் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் வேளாண்மைத் தொழிலை இயந்திரமயமாக்குவதை அரசு செய்து வருகிறது. இதன்படி வேளாண் இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கும் மானியமாக ரூ.20 லட்சம் வீதம் 400 சங்கங்களுக்கும் மொத்தம் ரூ.80 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் குறைந்த நிலப்பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தியும் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் நுண்ணீர்ப் பாசனம் அமைத்துப் பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு விருது: விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களை விலை வீழ்ச்சி அடையும் காலங்களில் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்ய ஏதுவாக விவசாயக் கிடங்குகள் கட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அதிக அளவு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விருது வழங்கவும் ஆணையிட்டுள்ளேன்.
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துச் செல்லும் வகையில் உழவர் பெருவிழா என்னும் விழிப்புணர்வு முகாம்களை கிராம அளவில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல், விதைச் சான்று, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளம், பால் வளம் போன்ற அனைத்துத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையங்களைச் சார்ந்த விஞ்ஞானிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சேவை வங்கியின் பிரதிநிதிகளால் நடமாடும் விரிவாக்க மையம் என்ற அணுகுமுறை மூலம் இந்த முகாம்கள் நடத்தப்படும்.
குறிப்பிட்ட கிராமச் சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும் வகையில் தேர்வு செய்யப்பட்ட லாபகரமான பயிர் ரகம், தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பு, பட்டுப் புழு வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, மீன் வளம் முதலான இனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையினைப் பின்பற்றி பண்ணை உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையில் தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்படும்.
அந்தந்த கிராமங்களில் ஏற்படும் பண்ணை அளவிலான களப் பிரச்னைகளுக்கு இந்த முகாம்களில் தீர்வு காணப்படும். தெருக் கூத்துகள், நாடகங்கள், கிராமியப் பாடல்கள், நடனம் மூலமாக விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் இந்த முகாம்களில் அளிக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த கையேடு, தொழில்நுட்ப வழிகாட்டி, வேளாண் இடுபொருள்கள் ஆகியவையும் வழங்கப்படும்.
அனைத்துத் துறைகளின் பணிகள், திட்டப் பலன்கள், அலுவலர்களின் முயற்சிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பச் செய்திகள், திட்டப் பலன்கள் விவசாயிகளின் சொந்த கிராமத்திலேயே கிடைக்கச் செய்யும் வகையில் நடத்தப்படும் இந்த உழவர் பெருவிழா வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கப்படும்.
இந்தப் பெருவிழா தமிழ்நாட்டில் உள்ள 16,564 வருவாய் கிராமங்களிலும் நடத்தப்படும். முகாமில் கலந்து கொள்ளும் விவசாயிகள் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்படும்.
நவீன வேளாண்மையில் உள்ள சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு அவர்களை வேளாண் வல்லுநர்களாக்கி தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை விரைவில் ஏற்படுத்த இந்த உழவர் பெருவிழா வழிவகை செய்யும் என்றார் முதல்வர்.

This comment has been removed by the author.
ReplyDeletethank u......
Delete